Traker

Monday, May 17, 2010

நபி வழியில் நம் தொழுகை - 02 (வுளு)

தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். இப்னு அபீ முலைக்கா நூல்: அபூதாவூத்

அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்முறை கழுகி, முகத்திஅயும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூது

மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.

கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக கழுவுதல்

உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்

கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்" என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதி, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டு, இதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்; தீங்கிழைத்து விட்டார்; அநியாயம் செய்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும்.

நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்; கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது "ஜனாபத் தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை" என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, இப்னுகுஸைமா

உளூச் செய்தபின் கூறவேண்டியவை

أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்

பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்
Share

Thursday, May 13, 2010

நபி வழியில் நம் தொழுகை - 01 (உளூ)

பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்

بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.

உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்

நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா

கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ

பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.

"உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது" என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பல் துலக்குதல், வாய் கொப்புளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல்

உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

"என சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத், அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

முகம், கைகளை கழுவுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்து, தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
Share
Related Posts with Thumbnails